கோவைவை: கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் விஜய் விகாஷ்-தீக்ஷனா ஆகியோரது திருமணம் ஈச்சனாரி செல்வம் மஹாலில் கடந்த 3ம்தேதி நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு விழா கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் ஏ, பி, சி ஆகிய ஹால்களில் நேற்று நடந்தது. முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர், பா.ஜ., எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், நடிகர்கள் சிவக்குமார், சத்தியராஜ், நடிகை கவுதமி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினர். விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 6.30 மணியளவில் வந்தார். அரை மணி நேரம் விழா அரங்கில் இருந்தார். பின்னர், காரில் புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பிறகு அரை மணி நேரம் கழித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கவே அவர் தாமதமாக வந்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.