ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்கள் மட்டுமே பயனடைகிறார்களா?: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து தவறானது என்றும் அதை நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் கூறுகையில்,’ குறைந்த விலையில் புடின் மோடிக்கு கச்சா எண்ணெயை கொடுக்கிறார்.
அதை இந்தியா சுத்தகரிப்பு செய்து ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் பணம் ஈட்டுகிறது. நான் இந்திய மக்களுக்குச் செல்ல விரும்புவதெல்லாம், என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்திய மக்களின் செலவுகளில் இருந்து பிராமணர்கள் பயனடைகிறார்கள்’ என தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து தொடர்பாக நேற்று இந்தியா விளக்கம் அளித்தது. ஒன்றிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறுகையில்,’ ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தவறான அறிக்கைகள் சிலவற்றை வெளியிட்டிருப்பதைப் பார்த்தோம்.
அவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம். மொரிஷயஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் குலாம் அரசுமுறைப் பயணமாக வரும் 9ஆம் தேதி இந்தியா வருகிறார். 16ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தற்போதைய அவரது பதவிக் காலத்தில் அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவர் தனது வருகையின்போது டெல்லி மட்டுமல்லாது, மும்பை, வாரணாசி, அயோத்தி, திருப்பதி ஆகிய நகரங்களுக்கும் செல்கிறார். இதற்கு முன் 2014ல் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மொரிஷியஸ் பிரதமர் இந்தியா வந்திருந்தார்’ என்று தெரிவித்தார்.