ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தால் உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகி விடுவேன்: ஜெலன்ஸ்கி சொல்கிறார்
நியூயார்க்: ஐநா பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் கூறியதாவது: ரஷ்யாவுடனான போர் முடிந்ததும் உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகி விடுவேன். எனது இலக்கு போரை முடிப்பதே தவிர, பதவிக்கு தொடர்ந்து போட்டியிடுவது அல்ல. உக்ரைனில் காலவரையின்றி அதிகாரத்தில் நீடிக்க விரும்பவில்லை. ஆனால் ரஷ்யாவுக்கு அமைதியில் எந்த ஆர்வமும் இல்லை. சர்வாதிகாரிகள் அணிவகுப்புகளில் காட்ட விரும்பும் பெரிய, கொழுத்த ஏவுகணைகள் உக்ரைனிடம் இல்லை. அதற்கு பதிலாக, நமது வாழ்க்கை உரிமையைப் பாதுகாக்க டிரோன்களை உருவாக்க வேண்டியிருந்தது. உண்மைகள் எளிமையானவை: உலகின் துறைமுகங்கள் அல்லது கப்பல்களைப் பின்னர் பாதுகாக்க முயற்சிப்பதை விட இப்போது புடினை நிறுத்துவது எளிதானது. இது உலகளாவிய ஆயுதப் போட்டியை விட எளிதானது.
இவ்வாறு கூறினார்.
* புடினை தடுக்காவிடில் போர் விரிவடையும்
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் ஜெலன்ஸ்கி பேசுகையில், ‘புடினை இப்போது தடுத்து நிறுத்தாவிடில் ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்துவார். நேச நாடுகள் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பிற நாடுகளை காப்பாற்ற முடியும். ஜார்ஜியா, பெலாரஸ் ஆகிய நாடுகளை புடினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவற விட்டுவிட்டது. அதேபோல ஐரோப்பிய நாடுகள் மோல்டோவாவையும் ரஷ்யாவிடம் இழந்துவிட கூடாது’ என்றார்.