Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம்; இந்தியா, சீனாவுக்கு மேலும் வரி விதிக்கணும்: ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து, இந்தியா மற்றும் சீனா மீது இறக்குமதி வரிகளை விதிக்குமாறு ஜி7 நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு நிதி செல்வதை தடுக்கும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியப் பொருட்கள் மீது ஏற்கனவே இருந்த 25 சதவீத வரியை இரட்டிப்பாக்கி, 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நியாயமற்றது எனக் கூறி இந்தியா நிராகரித்திருந்தது. ஆனாலும், சமீப காலமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக, இந்தியா மற்றும் சீனப் பொருட்கள் மீது கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்குமாறு ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கா தற்போது வலியுறுத்தி வருகிறது. இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கலாம் என அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. ஆனால், சீனாவின் பதிலடி மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சில ஐரோப்பிய நாடுகள் இதற்குத் தயக்கம் காட்டி வருகின்றன.

உக்ரைன் விவகாரத்தில் தனது நிலைப்பாடு நடுநிலையானது என்றும், எரிசக்தி கொள்முதல் தொடர்பான பொருளாதார அழுத்தத்தை எதிர்ப்பதாகவும் சீனா கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த பரிந்துரை குறித்து ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் காணொலி வாயிலாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், அதில் சுமூக முடிவு எட்டப்படும் எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளது, இந்த விவகாரத்தில் ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் நேற்று காணொலி மூலம் கூடி விவாதித்துள்ளனர்.