Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரஷ்யா ஏற்றுக் கொண்ட சமாதான திட்டம்; கவுரவத்தை இழப்பதா? பங்காளியை இழப்பதா?: ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் கடும் அதிருப்தி

வாஷிங்டன்: அமெரிக்கா தயாரித்துள்ள உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை அதிபர் ஜெலன்ஸ்கி இன்னும் படித்துக் கூட பார்க்காதது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப், 28 முக்கிய அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை உருவாக்கியுள்ளார். இதன்படி கிரிமியா, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை ரஷ்யாவிடம் விட்டுக்கொடுப்பது, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது, ராணுவத்தைக் குறைப்பது மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்ற கடுமையான நிபந்தனைகள் இதில் உள்ளன.

இந்தத் திட்டத்திற்கு ரஷ்யா ஏற்கனவே பச்சைக் கொடி காட்டிவிட்டது. ஆனால், ‘இந்த திட்டம் சரணடைவதற்குச் சமம்’ எனக் கூறி உக்ரைன் தரப்பு இந்த ஒப்பந்தத்தை ஏற்கத் தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று இதுகுறித்து பேசிய டிரம்ப், ‘ரஷ்யா இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது; ஆனால் அதிபர் ஜெலன்ஸ்கி இன்னும் இந்த அமைதி ஒப்பந்தத்தைப் படித்துக் கூட பார்க்காதது எனக்குச் சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது’ என்று கூறியுள்ளார். மேலும், ‘ஜெலன்ஸ்கிக்கு இந்தத் திட்டம் பிடித்தாக வேண்டும், இல்லையென்றால் போர் தொடரும்’ என்றும் அவர் சூசகமாக எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தாலும், ‘கவுரவத்தை இழப்பதா அல்லது முக்கியப் பங்காளியை இழப்பதா என்ற இக்கட்டான நிலையில் உக்ரைன் உள்ளது’ என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பியத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இதற்கென மாற்றுத் திட்டத்தை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது.