மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷ்ய அதிபர் புதினை இதுவரை மென்மையாக கையாண்டு வந்த டிரம்ப், சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘ரஷ்யா ஒரு காகித புலி. ரஷ்யாவால் போரை விரைவாக வெல்ல முடியவில்லை. உக்ரைன் தனது இழந்த பகுதிகள் அனைத்தையும் ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்க முடியும். புதினும் ரஷ்யாவும் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். உக்ரைன் செயல்பட இதுவே சரியான நேரம்’ என்றார்.
இப்படி ரஷ்யாவை கேலி செய்யும் விதத்தில் டிரம்ப் பேசியதற்கு புதினின் செய்தி தொடர்பாளரும், கிரெம்ளினின் பத்திரிகை செயலாளராகவும் பணியாற்றி வரும் டிமிட்ரி பெஸ்கோவ், ஆர்பிசி வானொலியில் பேசுகையில், ‘ரஷ்யா ஒருபோதும் புலி அல்ல. அது பாரம்பரியமாகவே கரடியாக பார்க்கப்படுகிறது. காகிதத்தால் ஆன கரடி என்று ஒன்று இல்லை. ரஷ்யா ஒரு உண்மையான கரடி... அதில் காகிதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 2022ம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலை தொடர்ந்து மேற்குலக நாடுகள் விதித்த தடைகள் காரணமாக சில பதட்டங்கள் இருந்தாலும், ரஷ்யா பொருளாதார நிலைத்தன்மையுடன் நீடிக்கிறது’ என்றார்.