Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐகோர்ட்டு வக்கீலை கொலை செய்த கூலிப்படைக்கு ரூ.1 கோடி: சதி திட்டம் தீட்டிய முக்கிய புள்ளிகள் யார்?

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் (38). அவரது சித்தப்பா தண்டபாணி ஏவிய கூலிப்படையால் கடந்த 27ம் தேதி தண்டபாணியின் பள்ளி அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய தண்டபாணி (65), அவரது நண்பர் ரியல் எஸ்டேட் புரோக்கர் நாட்டுத்துரை (65) உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கொலையில் தொடர்புடையவர்கள் வேறு கும்பல் என்பது தெரியவந்தது. விசாரணையில், கொலையில் ஈடுபட்டது திருச்செங்கோடு பாலமுருகன் (45), நாமக்கல் மாவட்டம் எழுவம்பட்டி அண்ணாதுரை (35), இளச்சிபாளையம் சசிகுமார் (34), நல்ல சமுத்திரம் சுதர்சன் (40), திருச்செங்கோடு சதீஷ்குமார் (45), தாராபுரம் முருகானந்தம் (50) ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, தனி இடத்தில் வைத்து நடத்திய விசாரணையில், கைதான பாலமுருகன் முக்கிய குற்றவாளி என்பதும், மேலும் 4 பேர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கைதான 6 பேரையும் நீதிபதி உமா மகேஸ்வரி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: வக்கீல் முருகானந்தத்தை கொல்ல கூலிப்படையை கடந்த 3 மாதத்திற்கு முன்பே அவரது சித்தப்பா தயார் செய்துள்ளார். கூலிப்படை தலைவனாக எழுவம்பட்டி அண்ணாதுரை இருந்துள்ளார். இந்த கொலைக்கு ரூ.1 கோடி கூலி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு திட்டம் வகுத்து கொடுத்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்நிலையில், தண்டபாணி உள்ளிட்ட 6 பேருக்கும் நேற்று வரை (4ம் தேதி) போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதில், தண்டபாணி, அவரது நண்பர் நாட்டு துரை, கூலிப்படையைச் சேர்ந்த திருச்சி தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேரிடம் கூடுதலாக விசாரிக்க மீண்டும் தாராபுரம் கோர்ட்டில் மனு அளித்துள்ளோம் என்று கூறினர். போலீசாரின் மனுவை நீதிபதி உமா மகேஸ்வரி ஏற்று 3 பேரிடமும் வரும் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.