பெரம்பூர்: வடசென்னையை கலக்கியவர் வியாசர்பாடியை சேர்ந்த நாகேந்திரன் (55). இவர் மீது பல்வேறு கொலை, ஆள்கடத்தல் போன்ற பல வழக்குகள் உள்ளன. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த வியாழக்கிழமை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று மதியம் மருத்துவர் சாந்தகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது.
மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா மற்றும் தடயவியல் மற்றும் நச்சுயியல் துறை தலைவர் பிரியதர்ஷினி தலைமையில் உடற்கூறாய்வு நடந்தது. இன்று அவரது உடலை போலீசார் ஒப்படைக்கின்றனர். இதையடுத்து, அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.இதை தொடர்ந்து வியாசர்பாடி பகுதியில் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.