புதுடெல்லி: சாலை விபத்துக்களால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டங்களை கட்டாயமாக்கும் வரைவு வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது. ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை சார்பில் நிலையான இயக்க நடைமுறை வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பொது ஆலோசனைக்கான இந்த வரைவு வழிகாட்டுதல்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.
இந்த வழிகாட்டுதல்களில், ‘‘சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணுதல், உடனடி மருத்துவ வசதி, மறுவாழ்வு மற்றும் நீண்ட கால சமூக ஒருங்கிணைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கவேண்டும். அனைத்து புதிய மற்றும் மறுசீரமைக்கப்பட்ட சாலை மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகளும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 மற்றும் தொடர்புடைய இந்திய சாலை காங்கிரஸ் குறியீடுகளுக்கு இணங்க வேண்டும். இதில் தொட்டு உணரக்கூடிய நடைபாதை, சாய்வுப்பாதைகள், அணுகக்கூடிய குறுக்குவழிகள், கேட்கக்கூடிய சிக்னல்கள், தாழ்வு தள பேருந்துகள் மற்றும் முன்னுரிமை இருக்கைகள் ஆகியவை அடங்கும்.
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழக்கமான தணிக்கைகளை நடத்த வேண்டும். மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகள் போன்ற அதிக மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும். அணுகல் தரநிலைகளை பூர்த்தி செய்வதற்கு பொதுப்போக்குவரத்து மற்றும் செயலி அடிப்படையிலான வாடகை வண்டிகள் அணுகலை பூர்த்தி செய்வது கட்டாயமாகும். மாற்றுத்திறனாளிகள் உதவி திட்டம் மற்றும் தொடர்புடைய மாநில திட்டங்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை உறுப்புகள், சக்கர நாற்காலிகள் மற்றும் கேட்கும் கருவிகள் போன்ற உதவி சாதனங்கள் வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.