டெல்லி : புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடப்பதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா, விஸ்வநாதன் அமர்வு விசாரணை செய்தார்கள். அப்போது, அதிகரித்துள்ள சாலை விபத்துகள் குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அதன் படி, மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 138(1A) மற்றும் 210 D பிரிவுகளின் படி மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களான சைக்கிள், கை வண்டி உள்ளிட்டவற்றின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை கண்காணிக்கும் வகையில் சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை 6 மாதத்திற்குள் உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளை மாதிரியான விதிகளை அமல்படுத்த மாநில அரசுகள் விரும்பினால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.