சென்னை: தீபம் ஏற்றுவதாக கூறி திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படுத்த பாஜ, இந்துத்துவா அமைப்பினர் முயற்சி செய்வதாக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருமாவளவன் (விசிக): தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால், அரசியல் செய்வதற்கும், முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி, மக்களிடத்தில் பதற்றத்தை உருவாக்குவதற்கும், ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. நீதிமன்றத்திற்குள்ளே இருந்து, வேலை செய்யும் நீதிபதி நடவடிக்கைகள் மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அவர் தொடர்ந்து இதுபோன்ற அதிரடி தீர்ப்புகளை தந்து, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருவது கவலை அளிக்கிறது. நீதிபதி பதவியில் நீடிக்க தகுதி உள்ளவர் தானா என்ற கேள்வி எழுகிறது. அவரது நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கது.
வேல்முருகன் (தவாக): அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழர் நாட்டில், புனிதமான இடத்தைக்கூட அரசியல் லாபத்துக்காகவும், மோதலை உருவாக்கவும் முயற்சித்ததன் பின்னணியில், பாஜவின் மாபெரும் சூழ்ச்சி வெளிப்பட்டுள்ளது.
திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்): இந்த அமைப்பு கோவை கலவரத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றிருக்க கூடிய நிர்வாகிகளை கொண்டவை. கலவரம் செய்வது மட்டும்தான் இந்து முன்னணியின் வரலாறாக உள்ளது. காவல்துறையினர் - சிஐஎஸ்எப் படை வீரர்களை நீதிமன்றம் ஏவி விடுகிறது. ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் அனுமதிக்க கூடாது. உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் எம்பி.க்கள் முன்வைக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): இந்த விவகாரத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தி தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயன்ற சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மை, சமத்துவம், சிறுபான்மையினரின் மத உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளதால் அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

