வழிபாட்டு உரிமையில் சமரசம் செய்து கொள்ள முடியாது: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு செல்வப்பெருந்தகை வரவேற்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு கோயில்களில் வழிபாட்டு உரிமையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி ஆணை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை தமிழக காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் சாதி வேறுபாடுகளை கடந்து அனைவரையும் சமமாக கருதுகிற வகையில் வழிபாட்டு தலங்களில் அனைவரும் கடவுளை தரிசிக்கிற உரிமையை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றிலும் முன்னோடி மாநிலமாக இருக்கிற தமிழ்நாடு அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகிற வகையில் ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.