Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விலக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க கோரி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மனு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த போது, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க ஆணையராக சகாயத்தை உயர் நீதிமன்றம் நியமித்தது. விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக உயர் நீதிமன்றத்துக்கு அவர் அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. 2014ம் ஆண்டு முதல் சகாயத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, 2023ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தனக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கக்கோரி சகாயம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தன்னால், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலவில்லை. மீண்டும் பாதுகாப்பு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.