Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரு தரப்பு கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் காஞ்சி மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: ஆணையரிடம் கடிதம் வழங்கப்பட்டது

சென்னை: காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டத்தினை இரு தரப்பு கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் மேயருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், தமாக, சுயேட்சை என‌ மொத்தம் 51 மாமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கட்சியினரே, மாநகராட்சி மேயரான திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜூக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். மேலும், மாமன்ற கூட்டங்களை புறக்கணித்து வெளி நடப்பும் செய்த நிலையில், பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் போனது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் முதல் மாமன்ற கூட்டமானது நடத்தபடாமல் வருகிறது. மேலும், அண்மையில் கலெக்டரை சந்தித்து திமுக மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திட திமுக உட்பட 33 கவுன்சிலர்கள் மனு அளித்திருந்தனர். அதேபோல், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகனிடமும் அது தொடர்பாக மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், திமுக மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக, அறிஞர் அண்ணா அரங்கத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றுள்ள நிகழ்வு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காஞ்சிபுரம் டிஎஸ்பி முரளி தலைமையில் அண்ணா அரங்கத்தில் பலத்த போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த கூட்டத்திற்கு ஆணையர் செந்தில் முருகன் மட்டும் காலை 10 மணியில் இருந்து 11.40 மணி வரை காத்திருந்த நிலையில், அதுவரை மேயர் உள்பட இருதரப்பு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. ஆனால் திமுக 34வது வார்டு கவுன்சிலர் பிரவீன்குமார் மட்டும் வந்து ஆணையரிடம் கூட்டத்தை புறக்கணிப்பதாக கடிதத்தை கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

நேற்று நடைபெற இருந்த காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் இருதரப்பு கவுன்சிலர்கள் வராதால் தீர்மானம் தோல்வி அடைந்தது. பின்னர், நம்பிக்கை இல்லா தீர்மானம் கூட்டம் குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் மாநகராட்சியில் 33 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கடிதம் கொடுத்திருந்தனர். இது தொடர்பாக கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, நாங்கள் வாக்கு சீட்டுகளுடன் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்த தயார் நிலையில் இருந்தோம். ஆனால், இருதரப்பு கவுன்சிலர்களும் கூட்டத்திற்கு வராததால், நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.