வீடு, வாகன கடன் இஎம்ஐ குறையும் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி 5.25 சதவீதம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன் மூலம், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் இஎம்ஐ குறைய வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டில் 4வது முறையாக இந்த வட்டி குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான 3 நாள் கூட்டம் நேற்று முடிந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா நேற்று அறிவித்தார்.
அதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி கால் சதவீதம் குறைக்கப்பட்டு 5.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த பிப்ரவரியில் கால் சதவீதமும், ஏப்ரலில் கால் சதவீதமும் , ஜூன் மாதத்தில் அரை சதவீதமும் குறைக்கப்பட்டது. மறு சீராய்வு கூட்டத்தில் உறுப்பினர்கள் 6 பேரின் ஏகமனதான முடிவுடன் வட்டி குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இத்துடன் சேர்த்து நடப்பாண்டில் மொத்தம் 1.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, ரூ.1 லட்சம் கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்குதல் மற்றும் 5 பில்லியன் டாலர் - ரூபாய் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பண வீக்கம் 2 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல், முதல் அரையாண்டில் வளர்ச்சி 0.8 சதவீதம் அதிகரிக்கும் எனவும், நடப்பு ஆண்டில் இந்த வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவுக்குள் வருவதால், சர்வதேச சூழ்நிலை சாதகமாக இல்லாத சூழலிலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியையும், நுண் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் கருத்தில் கொண்டு முடிவுகள் வகுக்கப்படும்என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
* வாடிக்கையாளர் குறைகளை களைய புதிய திட்டம்
நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்கள் குறைகளுக்கு ஓம்பட்ஸ்மேன் மூலம் 2 மாதங்களில் தீர்வு காண ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நிலுவையில் உள்ள குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, மறு கேஒய்சி போன்ற நடைமுறைகளுக்கு இது உதவும் என கூறப்படுகிறது.

