Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்தியாளரை தாக்கிய வழக்கு; 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு சம்மன்: புதுச்சேரி போலீஸ் அதிரடி

புதுச்சேரி: செய்தியாளரை தாக்கிய வழக்கில் வரும் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு புதுச்சேரி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் கடந்த நவ.23ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்ேபாது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கும், சீமானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சீமான் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அந்த செய்தியாளர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சீமான் உள்ளிட்ட சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, போலீசார் கூறுகையில், ‘செய்தியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக சீமான் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்திலேயே ஜாமீனில் வெளியே வரக்கூடிய பிரிவின் கீழ் தான் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் முத்தியால்பேட்டையை சேர்ந்த சுந்தரபாண்டி, கடலூரை சேர்ந்த செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகி செய்தியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்தனர். பிறகு மீண்டும் அவர்கள் காவல் நிலையம் வந்து ஜாமீன் வாங்கி கொள்ளலாம். அவர்களை கைது செய்ய வேண்டியது இல்லை. சீமானுக்கு வரும் 8ம் தேதி வில்லியனூர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.