Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கழுகுமலை - கோவில்பட்டி இடையே பழுதான உப்போடை பாலம் சீரமைப்பு

*வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

கழுகுமலை : கழுகுமலை - கோவில்பட்டி இடையே உப்போடை ஓடையின் மீதுள்ள உயர்மட்ட பாலத்தில் கான்கிரீட்டுகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்த மேற்பகுதியை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு கழுகுமலை வழியாகத்தான் பேருந்துகள், கார்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், வேம்பார், கீழவைப்பார், சிப்பிகுளம், தருவைகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன் வாங்கிக் கொண்டு தினமும் கேரளா மாநிலம் கொல்லம், புனலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும்.

கோவில்பட்டி முதல் கழுகுமலை இடையே சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஓடைகள் குறுக்கிடுகின்றன. இதில், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த சாலையில், கல்லூரணியை அடுத்து சங்கரலிங்கபுரம் விலக்கு பகுதியில் உப்போடையின் மீது கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால், இந்த பாலத்தின் மேல்பகுதியில் சிமென்ட் பெயர்ந்து வருகிறது. கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வருவதால், தற்போது பாலத்தின் நடுவே பள்ளம் உருவாகி காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

ஏற்கனவே, கல்லூரணி கிராமத்தின் வழியாக வரும் சாலையில் ஆங்காங்கே தார் பெயர்ந்து கிடக்கிறது. டிராக்டர் சென்றால், பெரியளவில் கீறல்கள் போன்று தார்ச்சாலை உடைந்துள்ளன.

மேலும் கெச்சிலாபுரம் விலக்கு அருகே உள்ள பாலத்தின் நடுவில் பெரிய பள்ளம் உருவாகி இருந்தது.

இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, உடனடியாக கல்லூரணி முதல் கழுகுமலை வரையிலான சாலையை சீரமைத்து, சங்கரலிங்கபுரம் விலக்கு பகுதியில் உள்ள உயர்மட்ட பாலத்தை பராமரிக்க வேண்டும். கெச்சிலாபுரம் விலக்கு அருகில் உள்ள பாலத்தின் பள்ளத்தையும் சீர்செய்ய வேண்டும்.

இதுகுறித்து என கடந்த நவ.5ம்தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று முன்தினம் சங்கலிங்காபுரம் உப்போடை பாலத்தின் மேல்பகுதி பள்ளத்தை ஜல்லி, தார் ஒட்டு போட்டனர்.

மேலும் கெச்சிலாபுரம் விலக்கு பகுதி அருகேயுள்ள பள்ளத்தையும் சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தினகரன் நாளிதழுக்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.