Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.20 லட்சம் வாடகை பாக்கி யுவன்சங்கர் ராஜா மீது துபாய் தம்பதி புகார்: போலீசார் விசாரணை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் ஸ்டுடியோ நடத்தும் தனது வீட்டிற்கு ரூ20 லட்சம் வரை வாடகை பாக்கி தராமல் ஏமாற்றி வருவதாக துபாயில் வசித்து வரும் தம்பதி, பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6வது தெருவில் பஷீலத்துல் ஜமீலா என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோ நடத்தி வந்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் துபாயில் தங்கியுள்ளார். மாத வாடகை ரூ.1.25 லட்சம் என்றும், அட்வான்சாக ரூ.12 லட்சம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சில மாதங்களுக்கு பிறகு வீட்டின் வாடகை ரூ.25 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18 லட்சம் வாடகை பணத்தை யுவன் சங்கர் ராஜா கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டின் உரிமையாளர் தனது வக்கீல் மூலம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகு மொத்த வாடகை பாக்கி ரூ.18 லட்சத்தில் ரூ.12 லட்சம் பணத்தை காசோலையாக யுவன் சங்கர் ராஜா வழங்கியுள்ளார். மீதமுள்ள ரூ.6 லட்சம் பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை வாடகை பணம் ரூ.14 லட்சம் மற்றும் ஏற்கெனவே கொடுக்க வேண்டிய ரூ. 6 லட்சம் பாக்கி என மொத்தம் ரூ.20 லட்சம் பணத்தை கொடுக்காமல் யுவன் சங்கர் ராஜா வீட்டை திடீரென காலி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த வீட்டின் உரிமையாளரான பஷீலத்துல் ஜமீலா, ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறையில் புகார் அளித்தார். மேலும், பஷீலத்துல் ஜமீலாவின் உறவினர் முகமது ஜாவித் என்பவர் மூலம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா மீது நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் யுவன் சங்கர் ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

இதனிடையே தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி வீட்டின் உரிமையாளர் பஷீலத்துல் ஜமீலா மீது ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.