*நொடியில் சரிந்த வீடியோ காட்சிகள்
காரமடை : காரமடையை அடுத்துள்ள காளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு விஜயநகரம் பகுதியில் 35 ஆண்டுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
அப்போதைய மக்கள் தொகைப்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டது. மேலும், 35 ஆண்டு ஆகிவிட்டதால் சிதிலமடைந்து எப்போது இடிந்து விழுமோ? என்னும் அச்சத்தில் அப்பகுதி பொது மக்கள் இருந்து வந்தனர். இதனால் நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு அப்பகுதியில் புதிதாக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொது மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீலகிரி எம்பி ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அதே பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதற்கிடையே அபாய நிலையில் இருந்த பழைய நீர்த்தேக்க தொட்டியை நேற்று இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்றது.
இந்த பணியில் அதிகாரிகள் முன்னிலையில் கீழ் தளத்தில் இருந்த பில்லர்களில் சுத்தியலை கொண்டு அடிக்க அடிக்கவே நொடிப்பொழுதில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி சரிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கையாக அப்பகுதிக்கு மக்கள் எவரும் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.