Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத மோதலை உருவாக்கும் வகையில் பேச்சு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இது குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும் தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார்.

இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதீனத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆதீனத்தின் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.