Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் விவகாரம்; அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையில் தமிழக அரசு உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்து மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை பகுதிக்கு நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

இதற்கு காவல்துறை தரப்பில் உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதனிடையே, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ராம.ரவிக்குமார் தரப்பில் நேற்று மீண்டும் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சில் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி, ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லாவிட்டால், 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்தார்.

முன்னதாக திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் திருப்பரங்குன்றம் கோயில் சுற்றுப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் வழக்கமான நடைமுறையில் நேற்று மாலை திருப்பரங்குன்றம் மலை உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றினர். இந்நிலையில், நீதிமன்ற அவதிப்பு வழக்கு மனுவை நேற்று மாலை 6.10 மணிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில், ‘‘மோட்ச தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘ஏன் நீதிமன்ற தீர்ப்பை அரசுத் தரப்பில் நிறைவேற்றவில்லை?’’ என்றார். இதற்கு அரசுத் தரப்பில், ‘‘வழக்கம் போல் தீபம் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஐகோர்ட் கிளை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டரை அழைத்து, ‘‘இந்த வழக்கின் மனுதாரருடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சென்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார். அப்போது தங்கள் கோரிக்கைப்படி, நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து பாஜக, இந்து அமைப்பினர் முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரண்டு போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதில் 2 போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பேரிகார்டுகளை உடைத்து எரிந்தனர்.

கலவரத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் தரப்பில் மேல்முறையீடு செய்யப் பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ‘போதிய கால அவகாசம் இல்லை. அவமதிப்பு வழக்கிற்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது சட்டமீறல். அரசு அப்பீல் செய்யவில்லை என்பது தவறு. உடனடியாக மனு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பீல் செய்ய 30 நாள் அவகாசம் உள்ளது. தொடக்க நிலையிலேயே நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளதாக நீதிபதி முடிவுக்கு வந்துள்ளார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக நடந்து ெகாண்டனர்.

10 பேருடன் மனுதாரர் செல்ல தனி நீதிபதி அனுமதித்துள்ளார். அவர் ஏராளமானோருடன் அங்கு கூட்டமாக சென்றார். இதனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. சமூக அமைதி பாதித்துள்ளது. தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளன. போலீசார் தாக்கப்பட்டுள்ளனர். போதுமான வீடியோ ஆதாரம் உள்ளது. மனுதாரர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த காலகட்டத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியாது. மதபிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. சிஐஎஸ்எப் கமாண்டன்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற பாதுகாப்பு பணி மட்டுமே அவர்களுக்கு. அவர்களை எப்படி சட்டம் ஒழுங்கு பணிக்கு அனுப்ப முடியும். அவர்களுக்கு எல்லை வரம்பு உள்ளது. நீதிமன்றத்தை தாண்டி வெளியில் செல்ல முடியாது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதித்துறை வரம்பை மீறுவதாகும்.

சிஐஎஸ்எப் ஒரு போலீஸ் பிரிவு அல்ல. நீதிமன்ற வளாக பணியில் மட்டுமே அவர்கள் ஈடுபட முடியும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தான் வழங்க முடியும். 5 மணிக்கு விசாரித்து திட்டமிட்டே உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதித்ததால் 163 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. நீதித்துறை நலன், பொதுமக்கள் மற்றும் பொது அமைதிக்கான நலன் கருதி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, நீண்ட காலமாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்றப்படுகிறது. அவர்கள் தர்கா அமைந்துள்ள பகுதியில் ஏற்ற முயற்சிக்கின்றனர். நூறாண்டுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் தான் ஏற்றப்படுகிறது. ரிட் மனுவில் தர்கா தரப்பை சேர்க்கவில்லை. ஓரிரு நாள் கூட அவகாசம் தரவில்லை. நூறாண்டிற்கு மேலாக ஏற்றப்படும் இடத்தை உடனடியாக ஏன் மாற்ற வேண்டும்.

ஏற்கனவே கார்த்திகை தீபம் ஒரு இடத்தில் தான் ஏற்றப்படுபடுகிறது. ஏன் மற்ெறாரு இடத்தில் ஏற்ற வேண்டும். உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதி தீபத்தூணில் ஏற்றுவது தான் சரியானது. திருவண்ணாமலை போன்ற முக்கிய இடங்களில் ஒரு இடத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது என்றார். மனுதாரர் தரப்பில் வக்கீல் வெங்கடேஷ் ஆஜராகி, ‘தனி நீதிபதி உத்தரவை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், உத்தரவாதம் கூட தர இயலவில்லை. வேறு வழியில்லாததால் மாற்றுவழியாகத் தான் சிஐஎஸ்எப் பாதுகாப்புக்கு உத்தரவானது. ஏனெனில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போலீசார் தயாராக இல்லை. அப்போது நீதிபதிகள், சிஐஎஸ்எப் பாதுகாப்பு மூலம் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியுமா?. என்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தான் என்று மனுதாரர் தரப்பில் பதில் அளித்தனர். இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான அரசின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் உத்தரவிட்டனர். உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாததால் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்புடன் தீபம் ஏற்ற ஆணை பிறப்பிப்பு எனவும் விளக்கம் அளித்தனர்.