டெல்லி : செங்கடலின் அடியில் கேபிள் சேதமடைந்ததால் நேற்று தெற்காசிய நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இணைய சேவை பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஆழ்கடல் இணைய கேபிள்கள் குறிவைக்கப்படலாம் என ஏற்கெனவே அஞ்சப்பட்டது. ஆனால் கடந்த காலங்களில் கேபிள்கள் மீது தாக்குதல் நடத்தியதை வரதி கிளர்ச்சிப் படையினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இணைய சேவைகளைக் கண்காணிக்கும் நெட்பிளாக்ஸ் நிறுவனம், 'செங்கடலில் ஏற்பட்ட தொடர் ஆழ்கடல் கேபிள் துண்டிப்புகளால், இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் இணைய இணைப்பு வேகம் குறைந்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அருகே உள்ள 'எஸ்.எம்.டபிள்யூ.4' மற்றும் 'ஐ.எம்.இ.டபிள்யு.இ. கேபிள் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறுகளே இதற்குக் காரணம்' என தெரிவித்துள்ளது.