Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் கிடப்பில் போட முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அதிரடி

புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் எட்டாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியன், ‘‘ மாநில அரசு நிர்வாகம், மாநில சட்டமன்றம் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. மேலும் உச்ச நீதிமன்றத்தினுடைய ஒரு தீர்ப்பை குடியரசுத் தலைவர் ரத்து செய்ய அதிகாரம் கிடையாது. குறிப்பாக சட்டம் இயற்றுவதில் எந்தவித பங்கும் இல்லாதவர் ஆளுநர் ஆவார் என்றார்.

இதையடுத்து கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘அரசியல் சாசனத்தை மீறி செயல்பட ஆளுநருக்கு அதிகாரமில்லை. குறிப்பாக மசோதா விவகாரத்தில் கூடிய விரைவில் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்பது, நியாயமான கால வரம்புக்குள் அல்லது குறுகிய காலத்துக்குள் என்பதாகும். எனவே ஆளுநர் என்பவர் மசோதாக்களை கால வரம்பின்றி கிடப்பில் போடவோ, தனது விருப்பமான நேரத்தில் முடிவெடுக்கலாம் என்றோ கிடப்பில் போடமுடியாது. அதற்கு அரசியல் சாசனம் வழிவகை செய்யவில்லை .ஒருவேளை, பொருளாதார மசோதாவாக இருக்கும் பட்சத்தில் அதனை சில மாதம் கிடப்பில் போட்டால் அரசு நிர்வாகம் எவ்வாறு செயல்படும். அரசு ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மசோதா விவகாரத்தில் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

பஞ்சாப் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘அரசியல் சாசன பிரிவு 200ல் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகள் மட்டுமே ஆளுநருக்கு மசோதா ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் உள்ளது. எந்த ஒரு மசோதாவாக இருந்தாலும் சட்டமன்றத்தில் மறு நிறைவேற்றம் செய்து மீண்டும் அனுப்பப்பட்டால் அதற்கு ஒப்புதல் வழங்கி தான் ஆக வேண்டும். அதற்கு மாற்றாக அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ அல்லது கிடப்பில் போடவும் ஆளுநருக்கு எந்த ஒரு விருப்புரிமையும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,‘‘ குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்திற்கு திரும்ப அனுப்பும் போது, அந்த மசோதா மறு நிறைவேற்றம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டால், அதனை குடியரசுத் தலைவரால் கிடப்பில் போட முடியாது. அதற்கு ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும். அதே வழிமுறை தான் ஆளுநருக்கும் சட்ட விதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.