ராசிபுரத்தில் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல் வேலூரில் ரூ.32 கோடியில் மினி டைடல் பூங்கா திறப்பு: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை: வேலூரில் ரூ.32 கோடி செலவில் மினி டைடல் பூங்கா தரை மற்றும் நான்கு தளங்களுடன், 60,000 சதுர அடி கட்டுமான பரப்பளவில், 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.மேலும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள மினி டைடல் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, வேலூர் மினி டைடல் பூங்காவினை முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ள M/s. AGS Health care நிறுவனத்திற்கு தள ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் வழங்கினார். இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் வேலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வசித்து வரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுவதுடன் அப்பகுதிகள் சமூக-பொருளாதார வளர்ச்சி பெறவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும். இந்த நிகழ்ச்சியில் நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
