பலாத்கார வழக்கில் 51 நாட்கள் சிறையில் இருந்தவர் விடுதலை: தவறான புரிதலில் புகாரளித்ததாக பாதிக்கப்பட்ட பெண் திடீர் பல்டி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2020ம் ஆண்டு போலீசில் புகார் கொடுத்தார். அதில், கடந்த 2017ம் ஆண்டிலிருந்து தன்னுடன் பழகி வந்த நபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து சால்ட்லேக்கில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாகவும், மறுநாள் காலையில் அவர் ஏமாற்றி விட்டு ஓடிவிட்டதாகவும் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், 2020 நவம்பர் 24ல் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்மந்தப்பட்ட நபரை அடுத்த நாள் கைது செய்தனர். நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் வரை அந்த நபர் 2021 ஜனவரி 14 வரை 51 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கு கடந்த மாதம் 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது பாதிக்கப்பட்ட பெண் சில தவறான புரிதலால் புகார் அளித்ததாகவும் வேறு எதுவும் நினைவில்லை என திடீர் பல்டி அடித்துள்ளார். 5 ஆண்டுகளாகவே குற்றம்சாட்டப்பட்ட நபருடன் உடல் ரீதியாக பழகி வருவதாகவும், நண்பர் எழுதிய புகாரில் கையெழுத்து மட்டும் போட்டதாகவும் அந்த பெண் கூறி உள்ளார். இதனால் வயதுக்கு வந்த 2 நபர்கள் பரஸ்பர சம்மத்ததுடன் உடல் உறவு கொண்டிருப்பதாகவும் இதில் பலாத்காரம் நடந்ததாக புகாரில் கூறப்பட்டபடி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.