Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றுமுதல் ஸ்டிரைக்: ஆக. 15ல் உண்ணாவிரதம், 19ல் ரயில் மறியல்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஆக. 15ல் சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டமும், ஆக. 19ல் ரயில் மறியல் போராட்டமும் நடத்த உள்ளனர். தனுஷ்கோடி கடல் எல்லையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ‘‘இலங்கை வசம் உள்ள 49 மீனவர்களையும், 9 படகுகளையும் ஒன்றிய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு மீட்க வேண்டும். கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்படுவதால் அவர்களின் குடும்பத்தை பாதுகாத்திட அரசுகள் உதவ வேண்டும். நல்ல நிலையில் உள்ள படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

பாரம்பரிய கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்குவது போல, ஒன்றிய அரசும் வழங்க வேண்டும். மீனவர்கள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் குரல் கொடுத்து மீனவர்களின் படகுகளையும் மீட்டு தர வேண்டும்’’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்களும் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தங்கச்சிமடத்தில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆக. 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். 19ம் தேதி மாலையில் தங்கச்சிமடத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* 4 ஆயிரம் மீனவர்கள் வேலை இழப்பு

இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து ரூ.3 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை நேற்று சந்தித்து, மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தனர்.