ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கியை காட்டி விரட்டியடித்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 313 விசைப்படகுகளில் மீனவர்கள், பாக்ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது துப்பாக்கியுடன் சிறிய ரக ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், திடீரென படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை அச்சுறுத்தினர். மீன் பிடிக்க விடாமல், துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர்.
இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் மீன்பிடி வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையின் பிடியில் சிக்காமல் தப்பினர். இதில் பிளவியன் படகை மடக்கி பிடித்த இலங்கை கடற்படையினர், அவரை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அப்போது படகு பழுதானதால், அவரை விட்டுச் சென்றனர். உடனே சக மீனவர்கள் படகை கட்டி இழுத்தனர். அப்போது இலங்கை கடற்படை மீனவர்களை விரட்டியதால், நடுக்கடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தால் மீனவர்கள் அப்பகுதியில் இருந்து சென்று தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்து நேற்று காலை கரை திரும்பினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர். தற்போது மீண்டும் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* இலங்கைக்கு படகில் தப்பிய தொழிலதிபர், 3 பேர் கைது
இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் தங்கராஜ் ஐங்கரன்(34). இவர், மீது அங்கு பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனால் வழக்கிலிருந்து தப்பிக்க கடந்த ஜூன் மாதம் படகில் தமிழகம் வந்து ராமநாதபுரம் அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். வழக்குகள் முடிவடையும் சூழல் உள்ளதால், அவர் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் உள்ள ஒரு புரோக்கர் மூலம் தனுஷ்கோடி கடற்பகுதியில் இருந்து படகில் நேற்று அதிகாலை தலைமன்னார் புறப்பட்டுச் சென்றார்.
தலைமன்னார் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த தங்கராஜ் ஐங்கரன் உட்பட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், தங்கராஜ் ஐங்கரன் சட்டவிரோதமாக தமிழகத்தில் பல மாதங்கள் தங்கியிருந்ததும், பின்னர் படகு மூலம் இலங்கை வந்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய, மாநில புலனாய்வு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
