Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சென்னை வருகை

மீனம்பாக்கம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள், இன்று காலை கொழும்பிலிருந்து ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடந்த ஜூலை 28ம் தேதி விசைப்படகு மூலம் நடுக்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

அவர்கள் நள்ளிரவு மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடலோர காவல் படையினர் 4 மீனவர்களின் விசைப் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் 4 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்தனர். மேலும், அவர்களின் விசைப் படகு, வலை மற்றும் மீன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும், இலங்கை கடலோர காவல் படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதினார். இதைத் தொடர்ந்து, இலங்கை அரசு அதிகாரிகளிடம் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விடுதலை செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை பாதுகாப்பாக வைத்து, அவர்களை மீண்டும் தமிழகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டனர். அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால், எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்க டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிலையில், இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து இன்று காலை சென்னை வரும் ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில், இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர்களை அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.