Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்சனை தொடர்ந்தால், பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும்: தேர்தல் ஆணையம்

டெல்லி : பாமக விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், போலி ஆவணம் கொடுத்து பா.ம.க கட்சியை அபகரித்ததாக அன்புமணி ராமதாசுக்கு எதிராக பா.ம.க ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் இன்று விசாரணை வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், "ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்சனை தொடர்ந்தால், தேர்தல் ஆணையத்தின் படிவம் 'A' மற்றும் படிவம் 'B' ஆகியவற்றில் இரு தரப்பு கையெழுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது. எனவே பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும். எங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணியை தலைவராக ஏற்றோம். இதில் பிரச்சனை இருக்கிறது என்றால் அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். கட்சியினர் இடையே நிலவும் பிரச்சனையில் தேர்தல் ஆணையத்தை யாரும் குறை கூற முடியாது."இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம், ராமதாஸ், அன்புமணி வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "பாமக கட்சிக்கு உரிமைகோரும் ராமதாஸ் சிவில் நீதிமன்றத்தை நாடலாம். அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. கடிதங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியாது.  கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரரின் கருத்தை பெற்று ஆணையம் முடிவு எடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் வரம்புக்குள் வராது," என தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார்.