ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஹர்மாரா பகுதியில் நேற்று பிற்பகல் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, திடீரென தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன் உள்பட 17 வாகனங்கள் மீது மோதிய லாரி இறுதியாக மற்றொரு லாரி மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement 
 
 
 
   