மழை அதிகரிக்கும் வாய்ப்பு; மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்; அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
சென்னை: மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அதிமுக நிர்வாகிகள் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று எடப்பாடி கூறியுள்ளர்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.