டெல்லி: பருவமழை துவங்கியத்திலிருந்து ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. உத்தரகாண்ட், ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீரில் அவ்வப்போது மேகவெடிப்பு காரணமாக அதிதீவிர கனமழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன. இதனால் அம்மாநிலங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "பஞ்சாபில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது.
இதுபோன்ற கடினமான காலங்களில், உங்கள் கவனமும் மத்திய அரசின் தீவிர உதவியும் மிகவும் அவசியம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உயிர்கள் மற்றும் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற போராடி வருகின்றன.
இந்த மாநிலங்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு - உடனடியாக ஒரு சிறப்பு நிவாரணப் நிதி அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.