Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கடலோரத்தில் மழை பெய்யும் வங்கக் கடலில் இரு காற்றழுத்த தாழ்வுகள்

சென்னை: தென்தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மத்திய ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. மேலும், வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது இதன் காரணமாக வட கடலோர உள் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மத்திய ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. மேலும், வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு-வடமேற்கு திசையில் நேற்று நகர்ந்து வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளை நோக்கி பயணிக்கிறது. இதையடுத்து, 25ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அது மேற்கு- வடமேற்கு திசையில் பயணித்து 26ம் தேதி தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27ம் தேதி தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கும். இந்த வானிலை அமைப்பின் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. அதனால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டது.

இன்றைய நிலவரப்படி, வட உள் மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், டெல்டா, சிவகங்கை, ஈரோடு, புதுக்கோட்டை மதுரைக்கு வடக்கே உள்ள மாவட்டங்கள், ஆந்திர எல்லையோர, கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை-சென்னை இடையே அதிகாலையில் கனமழை பெய்யும். திருத்துறைப்பூண்டி- கோடியக்கரை வரையும் மழை பெய்யும். இன்று மாலையில் மழை பெய்யும். இந்த நிலை 27ம் தேதி வரை நீடிக்கும். வெப்பநிலையை பொருத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும்.

சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். தென்தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும். 25, 26ம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.