Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

29ம் தேதி வரை மழை நீடிக்கும்: வங்கக் கடலில் தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் 29ம் தேதி வரை தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  வங்கக் கடலில் ஓடிசா மற்றும் மேற்கு வங்கம் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. ஹாங்காங் பகுதியில் இருந்து செயலிழந்த நிலையில் மியான்மர் வழியாக வரும் வைப்பா புயலின் ஒரு பகுதி வங்கக் கடலில் இறங்கியுள்ளது. இது வங்கக் கடலில் ஏற்கெனவே நிலை கொண்டுள்ள காற்றழுத்தத்துடன் 24ம் தேதியில் இணையும் என்றும் வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேற்கு திசையில் இருந்து தென்மேற்கு பருவக் காற்று வங்கக் கடல் நோக்கி ஈர்க்கப்படுகிறது. அதனால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்து ெகாண்டு இருக்கிறது. வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடையும் போது, சுழலத் தொடங்கும். அதன் காரணமாக தெற்குக் காற்று தமிழகத்தில் நுழையும். தமிழக வட கடலோர உள் மாவட்டங்களிலும் மழை, வட மாவட்டங்களிலும் மழை பெய்யும். டெல்டாவிலும் மழை பெய்யத் தொடங்கும். கடும் மேகமூட்டம் காணப்படும். இன்றும் நாளையும் இதே நிலை நீடிக்கும். தூறல் மட்டும் இருக்கும். கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இன்றும் அதேபோல ஆந்திர எல்லை, வட கடலோரப் பகுதியிலும் மழை பெய்யும். டெல்டாவில் மேகம் சூழ்ந்து தூறல் மழை பெய்யும். நாளையும் இதேபோல இருக்கும். 25ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக காற்றை திசை மாற்றி அடிக்கும். அதனால் தெற்கு காற்று தமிழகத்தில் நுழைந்து 25ம் தேதியில் இருந்து மழை பெய்யும். மாலை இரவில் நல்ல மழை பெய்யும்.

இது 29ம் தேதி வரையில் பெய்யும். அதற்கு பிறகு இப்போதுள்ள தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். கன்னியாகுமரி முதல் குஜராத் வரையிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தீவிரம் அடையும். மாத இறுதியில் குறையும். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று பாகிஸ்தானுக்கு சென்றுவிடும். பின்னர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மாலை, இரவில் இடி மழை பெய்யும்.