Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வங்கக்கடலில் அக்.21-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகத்தில் 24-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் அக்.21-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 21-ம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் (அக்.19), நாளை மறுதினமும், 23, 24 தேதிகளிலும் பெரும்பாலான இடங்களிலும், 21, 22 தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 20-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

21-ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும். 22-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

23-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் 24-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 22-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 18, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 16 செமீ, தேனி மாவட்டம் தேக்கடியில் 16 செமீ, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 14 செமீ, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 12 செமீ, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் தலா 11 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.