திருச்சூர்: கேரளாவில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மழையால் இடிந்த வீட்டை புதுப்பிக்க மனு கொடுத்த முதியவர் ஒருவரிடம் என்னுடைய வேலையல்ல என்று திருப்பி கொடுத்த சம்பவத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருச்சூரை சேர்ந்த கொச்சு வேலாயுதம் என்ற 80வயது முதியவர். 2 ஆண்டுகளுக்கு முன்பு மழை காலத்தில் தென்னை மட்டை விழுந்து கூரை சரிந்த தமது வீட்டை சரிசெய்யமுடியால் தவித்து வந்தார். உடல் நலன் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ள அவர் தனது பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திருச்சூர் பகுதி எம்.பியும் நடிகருமான சுரேஷ் கோபியிடம் உதவி கோரி மனு கொடுத்தார். ஆனால் மனுவை வாங்கும் போதே இதெல்லாம் எம்.பியின் வேலை இல்லை பஞ்சாயத்தில் சொல்லுங்கள் என்று சுரேஷ் கோபி கூறியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுரேஷ் கோபியின் அலட்சியமான பதில் கேரளா முழுவதும் வைரலாக நிலையில் அவரது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதியவர் கொச்சுவேலாயுதன் அந்த மனுவை படித்துக்கூட பார்க்காமல் கொடுத்தது தான் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாக கோரினார். இந்நிலையில் இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்ட செயலாளர் அப்துல் காதர் மனுவை வாங்கும் போதே நிராகரிக்கப்பட்ட கொச்சு வேலாயுதத்தின் வீட்டை கட்டித்தரும் பணியை சிபிஎம் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளார்.
இதை அடுத்து இந்த விவகாரம் குறித்து முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சுரேஷ் கோபி.பொது விஷயம் ஒன்றில் என்ன செய்ய முடியும் என்ற தெளிவான பார்வை தம்மிடம் இருப்பதாகவும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவது தமது வேலை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். வீட்டுவசதி என்பது மாநில அரசின் விவகாரம் அதை தான் எப்படி செய்ய முடியும் என்று வினவி உள்ள சுரேஷ் கோபி. ஒரு குடும்பத்துக்காக வீட்டை கட்டித்தர வேறொரு கட்சி முன்வந்திருப்பதை வரவேற்பதாகவும் தம்மால் அவர்களுக்கு வீடு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.