சென்னை: மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, நேற்று முன்தினம் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தது. நேற்று காலை ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு பூக்களின் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழைகாரணமாக பூக்களின் விலை குறைந்தது.
ஒரு கிலோ மல்லி ரூ.600ல் இருந்து ரூ.500க்கும், ஐஸ் மல்லி ரூ.500ல் இருந்து ரூ.300க்கும், முல்லை ரூ.400ல் இருந்து 300க்கும், ஜாதிமல்லி ரூ.450ல் இருந்து ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.800ல் இருந்து ரூ.500க்கும், அரளி ரூ.200ல் இருந்து ரூ.150க்கும், சாமந்தி ரூ.300ல் இருந்து ரூ.200க்கும், சம்பங்கி ரூ.200ல் இருந்து ரூ.120க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160ல் இருந்து ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘மழை காரணமாக அனைத்து பூக்களின் விலையும் குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டு விசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றும் அடைந்தனர்’ என்றார்.