Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் இன்று சூறாவளி காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் இரண்டாவது நாளாக பெய்து வரும் தொடர் மழையால் பூமி குளிர்ந்து ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவி வருகிறது. மேலும், தமிழகத்தில் இன்று சூறாவளி காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. ஆனாலும், சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. தற்போது வட தமிழக கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஓரளவு ஆறுதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் வரை சென்னையில் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் திடீரென அதிகனமழை கொட்டித் தீர்த்தது. மேக வெடிப்பு ஏற்பட்டதால் ஒரு சில மணி நேரங்களில் அதிகப்படியான மழை கொட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மணலி உள்ளிட்ட மூன்று இடங்களில் 27 செ.மீ. அளவுக்கு கனமழை பதிவாகியது. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 37 இடங்களில் கனமழை பெய்தது. அதேபோன்று நேற்றிரவும் நள்ளிரவில் சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், சென்னையில் 2வது நாளாக இரவில் கொட்டித் தீர்த்த மழையால் பூமி குளிர்ந்தது. இன்று காலை முதல் ஜில்லென்ற சீதோஷணம் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, மேற்குத் திசை காற்று வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், இடியுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, நாளை முதல் வரும் 6ம்தேதி என அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று வெயில் மிதமான அளவிலேயே இருக்கும். எனினும், தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரத்தில், தென்தமிழக கடலோரம், வடதமிழக பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிகடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 மதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.