இன்டர் லாக் செய்யாத ரயில்வே கேட்டுகளில் பணியாற்றுபவர்களுக்கு 8 மணி நேர வேலை : புதிய உத்தரவிற்கு சு.வெங்கடேசன் வரவேற்பு!!
சென்னை : கடலூர், லெவெல் கிராசிங் விபத்தை தொடர்ந்து ரயில்வேயின் புது உத்தரவு வரவேற்புக்குரியது என்று மதுரை சு. வெங்கடேசன் எம் பி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்டர் லாக் செய்யாத ரயில்வே கேட்டுகளில் 12 மணி நேர வேலைக்கு பதிலாக 8 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த ஆய்வு செய்யவும், கேட்டை திறக்க யாரும் நிர்பந்தம் செய்தார்களா இல்லையா என்பதை அறிய சிசிடிவி கேமரா அமைக்கவும், ரயில் வருவதை பார்க்க தடையாக இருக்கும் செடி கொடிகளை வெட்டி எடுக்கவும் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.
அதுவும் 10 நாட்களுக்குள் இவற்றை செய்திட அவர் உத்தரவிட்டுள்ளதையும், இன்டர் லாக் செய்யாத கேட்டுகளையும் விரைந்து இன்டெர் லாக் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.தெற்கு ரயில்வேயில் இன்டெர் லாக் செய்யப்படாத 314 கேட்டுகளையும் விரைந்து இன்டெர் லாக் செய்ய கேட்டுக்கொள்கிறேன். ஸ்டேஷன் மாஸ்டர், கேட் மேன் உள்ளிட்டவர்கள் 12 மணி நேர வேலை செய்யும் முறையை ஒழித்துவிட்டு எட்டு மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டுமென இடதுசாரிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகிறோம். விலைமதிப்பற்ற உயிர்களை பலிகொடுத்த பின்னர் தான் நிர்வாகம் இதனை யோசிக்கிறது என்பது வேதனை அளிக்கிறது. விபத்து நடந்து நினைவில் இருக்கும் வரை மட்டுமே இதைப் பேசி விட்டு பின்னர் வழக்கம்போல் காலதாமதம் செய்யாமல் பத்து நாளுக்குள் இவற்றை நிறைவேற்றிட உறுதியாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.