Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராகுல் காந்தி அடுத்த அதிரடி மபி, சட்டீஸ்கர் தேர்தல்களிலும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறது: விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும்

பச்மர்ஹி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) வாக்கு திருட்டை மறைத்து அதை நியாயமாக்கும் முயற்சி என குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, சட்டீஸ்கர், மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாகவும் அது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்த்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வருகிறார்.

இதுதொடர்பாக அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் நடந்த வாக்கு திருட்டு தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை வெளிப்படுத்தி அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். இந்நிலையில், மத்தியபிரசேத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க ராகுல் காந்தி நேற்று நர்மதாபுரத்தில் உள்ள பச்மர்ஹி நகருக்கு வந்த போது, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சில நாட்களுக்கு முன்பு, அரியானா தேர்தல் குறித்து ஒரு விளக்கக்காட்சியை வழங்கினேன். அந்த தேர்தலில் வாக்கு திருட்டு நடந்திருப்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. மொத்தம் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 8 வாக்குகளில் 1 வாக்கு திருடப்பட்டுள்ளது. அதைப் பார்த்த பிறகு, தரவுகளை ஆய்வு செய்த பிறகு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கரிலும் இதே போன்ற வாக்கு திருட்டு நடத்திருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். இது பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்தின் கூட்டு சதி.

வாக்கு திருட்டை மறைத்து, அதை நியாயப்படுத்த நிறுவனமயமாக்கத்தான் தற்போது எஸ்ஐஆர் கொண்டு வரப்படுகிறது. இதைப் பற்றி எங்களிடம் இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக விரைவில் வெளியிடுவேன். இப்போது வெளியிடப்பட்டிருப்பது மிகவும் குறைவானது. வாக்கு திருட்டால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. மோடி, அமித்ஷா, ஞானேஷ் குமார் கூட்டு சேர்ந்து இதை நேரடியாக செய்கிறார்கள். இதன் காரணமாக, நாடு நிறைய துன்பப்படுகிறது. பாரத அன்னைக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.