அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேடு வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், மதுரை வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் குமரேசன், வனவர் பூபதிராஜன் தலைமையில் வனக்காப்பாளர்கள் ராஜ்குமார், சேதுராஜ், துரைராஜ் ஆகியோர் நேற்று காலை பாலமேடு-வெள்ளையம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது பொம்மிநாயக்கன்பட்டி அருகே 5 பேர் நாய்களுடன் நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் நின்றிருந்த வேனை சோதனை செய்தனர்.
அதில் நாட்டுத்துப்பாக்கி, வேட்டையாடிய 2 முயல்கள், பேட்டரி லைட்டுகள் ஆகியவை இருந்தன. தொடர் விசாரணையில் பிடிபட்டவர்கள் அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சித்திரக்கண்ணன் (28), ராஜ்குமார் (23), விஜயகுமார் (24), மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (23) பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (26) என்பதும், பாலமேடு பகுதியில் வேட்டை நாய்களுடன் முயல்களை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிமிடருந்து துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட முயல்கள், வேன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் அழகர்கோவில் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.