Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புழல் சிறையில் இருந்து நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு

சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய 2 பேரும் புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் மதுபான விடுதியில் நடந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் போதைபொருள் மாபியாவாக செயல்பட்டது தெரியவந்தது. அவர் எங்கிருந்து போதைபொருள் வாங்கினார், யாருக்கெல்லாம் போதைபொருள் விற்பனை செய்தார் என்று போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்

இவர்கள் இருவரும் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைபொருள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், 2 நாளுக்கு முன் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இருவரும் தலா ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமீன், அதே தொகைக்கு இருவர் பிணை உத்தரவாதம் வழங்க வேண்டும்.

மேலும், மறுஉத்தரவு வரும்வரை ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருவர் தரப்பில் இருந்து பிணை உத்தரவாதம் அளித்து, அதற்கான உத்தரவு புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.