Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

புழல்: மழை பொழிவு குறைந்து, நீர்வரத்து சரிந்ததால் புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட 500 கன அடி உபரிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,692 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 18.42 அடியாக உள்ளது. ஏரிக்கு நேற்று முன்தினம் 910 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 710 கன அடியாக சரிந்துள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக நடப்பாண்டில் 4வது முறையாக கடந்த 14ம் தேதி முதல் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், மழை ஓய்ந்து நீர்வரத்து சரிந்து வருவதால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வந்த 500 கன அடி உபரிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதேபோல 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 572 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 13.29 அடி உயரத்தில் நீர்மட்டம் உள்ளது. ஏரிக்கு நேற்று முன்தினம் 84 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 145 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் திறப்பு ஏதுமில்லை. ஏரிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், கனமழை எச்சரிக்கை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் உபரிநீர் திறக்கப்படும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணியாற்றில் உபரிநீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பிச்சாட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆரணியாறு நீர்த்தேக்கத்தில் தற்பொழுது நீரின் மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், நீர்தேக்கத்தின் முழு நீர்மட்ட அளவு (+281.00). நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட அளவு (+280.30 அடி) அடைந்தது. இந்நிலையில், பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு 800 கன அடி உபரி நீரை திறந்துள்ளது. அணை முழு நீர்மட்ட அளவை எட்டியுள்ளதால், உபரிநீர் அளவுக்கு ஏற்றவாறு அதே அளவு நீரானது அணையிலிருந்து வெறியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் சுருட்டப்பள்ளி அணைக்கட்டின் மேல் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து பெறப்படும் நீர் என மொத்தமாக சிற்றப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரணியாறு அணைக்கட்டில் பெறப்படும் நீரின் அளவு 59 அடியாக உள்ளது. இந்த, வெள்ள நீரானது ஆரணியாறு தமிழ்நாடு எல்லை பகுதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆரணியாறு கரையோரம் ஒட்டியுள்ள கிராமங்களை கடந்து பழவேற்காடு வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் சென்றடைகிறது. ஆரணியாற்றின் இருபுறம் கரைகளை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆரணியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு, தடுப்பணை, பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வழியாக பொதுமக்கள் கடந்து செல்ல இயலாத வண்ணம் தடுப்பு அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.