புதுக்கோட்டை: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சி மலர்ந்த உடன் ஏழை எளிய மக்களுக்கு காங்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும்.
வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கி விலையில்லா வீடு கட்டி கொடுக்கப்படும். இது நம்ம கட்சி யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டணி வைக்கலாம். 2026ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி மிகப்பெரிய வரலாறு வெற்றியை பெறும். தனி பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணிக்காக கடையை விரித்து வைத்துள்ளனர். வியாபாரம் ஆகவில்லை என்று கூறுகின்றனர்.
அதிமுக ஐஎஸ்ஐ மாதிரி. ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி. அதிமுகவை பொறுத்தவரை மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி. இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறாமல், அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று மட்டும் பேசியது கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.