Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஃபிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி விடுதலை பெற்ற தினம்: தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஃபிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை கிடைத்த தினமான இன்று புதுச்சேரியில் விடுதலை திருநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதை ஒட்டி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றிவைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். புதுச்சேரி மாநிலம் ஃபிரான்ஸ் ஆதிக்கத்தில் சுமார் 300 ஆண்டுகள் இருந்தது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது. ஆனால் பிரெஞ்ச் ஆட்சியில் கீழ் இருந்த புதுச்சேரிக்கு அப்போது விடுதலை கிடைக்கவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் ஏழு ஆண்டுக்கு பிறகு புதுச்சேரி மக்களின் கருத்து கேட்பு நடத்தி 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி புதுச்சேரிக்கு பிரெஞ்ச் ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்தது. இந்த நாள் புதுச்சேரியில் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து கலைக்குழுவினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைபோல் புதுச்சேரி விடுதலை நாள் காரைக்கால், மாஹே உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விடுதலை நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலங்கள், தலைவர்களின் சிலைகள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. விடுதலை திருநாள் இன்று மாநில அரசு பொது விடுமுறை நாளாகவும் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.