*கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைந்தது 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி சேராத மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான ‘உயர்வுக்கு படி’ வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பர்கூர் எம்எல்ஏ மதியழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு முடித்ததில், 1098 மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில கல்லூரியில் சேராமல் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் வகையில், தமிழக அரசு ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சி நடத்துகிறது. 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி சேரும் மாணவ, மாணவியர்களின் சதவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்.
இந்த சதவிகிதத்தை மேலும் முன்னேற்ற, 12ம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் சேர்ந்து பயில வேண்டும். மாணவர்கள் படிப்பில் ஆர்வமின்மை, வறுமை, குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராமல் இருக்கலாம். நீங்கள் கற்கும் கல்விக்கேற்பதான் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். மூன்று வருடங்கள் பட்டப்படிப்பு படிக்க எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அவற்றிற்கு மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும்.
தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தால் நல்ல எதிர்காலம் கிடைக்கும். கல்வி பயில பொருளாதார பிரச்சனை உள்ள மாணவர்கள், கல்வி கடன் பெறுவது குறித்து ‘உயர்வுக்குப் படி” நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்படும்.
தமிழக முதல்வர், நடப்பாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறைந்தது 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பில் கல்வி கடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கல்வி கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.2.50லட்சம் வரை கல்வி கடன் பெற்று தர, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கல்விக்கடன் குறித்த தேவைகளை இந்த கட்டுப்பாட்டு மையத்தில் தெரிவிக்கப்பட்டால், மாவட்ட நிர்வாகமே வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுத் தரும்.
மாவட்டத்தில் தற்போது கல்லூரியில் சேராத 1098 மாணவர்கள் கண்டிப்பாக கல்லூரியில் சேர்ந்து, தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்வு செய்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இதுபோன்று உயர்கல்வி குறித்து நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, 8 மாணவ, மாணவிகளுக்கு அரசு கலைக்கல்லூரி, ஐடிஐ உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயிலுவதற்கான ஆணைகளை கலெக்டர் மற்றும் மதியழகன் எம்எல்ஏ வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) முனிராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்பத்மலதா, மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாசினி, அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் கீதா, நகர்மன்றத் துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கல்வி) சர்தார், உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், தாசில்தார் சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.