Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாளையில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் உடைந்ததில் தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு நஷ்டஈடு கோரி மறியல்

*கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு

கேடிசிநகர் : பாளையில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் உடைந்ததில் தவறிவிழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு, அரசு பணி வழங்க வலியுறுத்தி தொழிலாளியின் மனைவி, குழந்தைகள், உறவினர்களுடன் திரண்டு மனு அளிக்க வந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை புதுபேட்டை கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் மாடசாமி மகன் முருகன் (35). வெல்டிங் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் (28ம்தேதி) பாளை பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் மேற்கூரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆஸ்பெஸ்டாஸ் சீட் உடைந்து 40 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த முருகனை, சக தொழிலாளர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு பாலம்மாள் (25) என்ற மனைவியும், முகில்அரசன் (4), சுகிஷா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளன.

இந்நிலையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்தபோது 40 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறிவிழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இரு குழந்தைகளை பராமரிக்கவும் அவரது குடும்பத்திற்கு அரசு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மேலும் முருகனை வேலைக்கு அழைத்துச் சென்ற ஒப்பந்ததாரர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் விடுதலை களம் மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் தலைமையில் ஊர் நாட்டாண்மைகள் மற்றும் முருகனின் மனைவி, உறவினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மனு அளிக்க முக்கியமான 4பேர் மட்டும் செல்லுமாறு கூறியதை தொடர்ந்து மனு அளிக்க வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன்பின்னர் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்குபின் மறியலை கைவிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.