தூத்துக்குடி: முறையாக பதிவு செய்யாமல் காப்பகங்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக தமிழக அரசின் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்ற பின்பு அந்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள காப்பகங்கள் அனைத்தும் அனுமதி பெற்று நடத்த வேண்டும். முறையாக பதிவு செய்யாமல், அனுமதி பெறாமல் காப்பகங்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்ட சுமார் 600க்கும் மேற்பட்ட காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் காப்பகத்தில் உள்ள மாணவரை பெல்டால் தாக்கிய விவகாரத்தில் உடனடியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இல்லம் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.