புரோ கபடி லீக் 5வது அணியாக மும்பை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி: பெங்கால்-தமிழ்தலைவாஸ், யு.மும்பா-ஜெய்ப்பூர் அரியானா-குஜராத் அணிகள் இன்று மோதல்
புதுடெல்லி: 12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து நடந்த போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா அணிகள் மோதின. இறுதிவரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடந்த இந்த போட்டி 37-37 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க டைபிரேக்கர் கொண்டுவரப்பட்டது. இதில் மும்பை அணி 7-5 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான அரியானாவை வீழ்த்தி 9-வது வெற்றியை பெற்றதுடன் 5-வது அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தமிழ் தலைவாஸ் அணியும், 8.30 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில் யு.மும்பா-ஜெய்ப்பூர் அணியும், 9.30 மணிக்கு நடைபெறும் 3வது போட்டியில் அரியானா-குஜராத் அணிகளும் மோதுகின்றன.