Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாதியில் முடிந்த பரிசளிப்பு விழா ஆசிய கோப்பையை நக்வியிடம் பெற இந்திய அணி மறுத்ததால் சலசலப்பு: ஐசிசியிடம் முறையிட பிசிசிஐ செயலர் முடிவு

துபாய்: துபாயில் நேற்று முன்தினம் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதன் பின் நடந்த பரிசளிப்பு விழாவின்போது வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் அமினுல் இஸ்லாம், வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகாவிடம், அதற்கான காசோலையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி வழங்கினார். அடுத்ததாக, பரிசுக் கோப்பையை இந்திய அணி கேப்டனிடம் மோஷின் நக்வி வழங்க இருந்தார்.

அந்த சமயத்தில் அவரிடம் இருந்து கோப்பையை வாங்க விரும்பவில்லை என, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர் மறுப்பு தெரிவித்தனர். நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்ததால், வேறு வகையில் இந்திய அணியிடம் கோப்பை வழங்க மறுக்கப்பட்டது. அதனால் பரிசளிப்பு விழாவில் சலசலப்பு நிலவியது. சில நிமிடங்களில் பரிசளிப்பு விழா நிறுத்தப்பட்டது. அதன் பின், சாம்பியன்ஸ் பேனர் முன் நின்று இந்திய அணியினர் உற்சாகமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில், இது தொடர்பாக, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கூறுகையில், ‘பாகிஸ்தானை சேர்ந்த, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என ஏற்கனவே நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அதனால், மோஷின் நக்வி, பரிசளிப்பு விழாவில் இருந்து தானாக விலகி இருக்க வேண்டும். மாறாக, ஆசிய கோப்பையை இந்திய அணியிடம் வழங்க மறுத்தது தொடர்பாக, வரும் நவம்பரில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் முறையிடுவோம். விரைவில் கோப்பை இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என நம்புகிறோம்’ என்றார்.

* இந்திய வீரர்களுக்கு ரூ.21 கோடி பரிசு

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து, இந்திய அணி வீரர்களுக்கும், அதன் துணை ஊழியர்களுக்கும், ரூ. 21 கோடி பரிசு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா நேற்று அறிவித்தார்.